போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய, பெண் உள்பட இருவருக்கு, தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, தி.மலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர், புனிதவதி, 35. வேலுார் மாவட்டம், ஆற்காடைச் சேர்ந்தவர், விஜயகுமார், 37. இருவரும், செய்யாறு அடுத்த மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2014- முதல், 2017- வரை ஆசிரியராக பணியாற்றினர்.கடந்த, 2017 ஏப்ரலில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய ஜெயக்குமார், அப்பள்ளியில் ஆய்வு செய்தார். இதில் இருவரும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், போலி சான்றிதழ் தயாரித்து, ஆசிரியராக பணியில் சேர்ந்தது தெரிந்தது.இது குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், புனிதவதி, விஜயகுமார் ஆகியோர், போலி சான்றிதழ் தயாரித்தது உறுதியானது.
இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி விக்னேஷ்பிரபு, போலி சான்றிதழ் தயாரித்து பணியாற்றிய குற்றத்திற்காக புனிதவதி மற்றும் விஜயகுமாருக்கு, தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.
Adhuku piragu job ah?! Ennanga sir unga sattam?!
ReplyDelete