அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி சாத்தியமா? கல்வியாளர்கள் கருத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2020

அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி சாத்தியமா? கல்வியாளர்கள் கருத்து!



உலகம் முழுவதும் பள்ளிகளும் கல்வாரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன . இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஆன்லைன் வழியாக கற்பித்தல் பணிகள் தொடங்கிவிட்டன . நவீன தொழில்நுட்ப வசதிகளால் நகரங்கள் , பெருநகரங்களில் ஆன்லைன் கல்வி எளிதாகியிருக்கிறது . ஒருபக்கம் ஆன்லைன் கல்வி வளர்கிறது என்று பெருமையாகப் பேசினாலும் , மறுபுறம் சாதாரண போன் வசதிகூட இல்லாத கோடிக்கணக்கான மாணவர்களின் நிலையை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது . போக்குவரத்தும் இணைய வசதிகளுமற்ற ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி சாத்தியமா ? என்று கேள்வி எழுகிறது .

இதுகுறித்த கருத்துகளைப் பார்க்கலாம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலாளர் , பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை.

பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரையில் அரசுக்கு முழு பொறுப்புள்ளது . பொதுப்பள்ளிகள் பற்றி விவாதிப்பதற்குக் கூட யாரும் தயாராகயில்லை . தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 25 ஏழை மாணவர்களை அரசே சேர்த்திருக்கிறது . வீட்டில் அவர்களுக்கு ஆன்லைன் வசதி இருக்குமா ? வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அவர்கள் வருகிறார்கள் . பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்கேஜி சேர்ந்தவர்கள் இன்று எட்டாம் வகுப்பு படிப்பார்கள் . வீடுகளில் , அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்களின் குழந்தைகளிடம் என்ன வசதிகள் இருக்கும் . இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் , வீடற்றவர்கள் , குடியமர்த்தப்பட்டவர்களின் குழந்தைகள் பற்றி நாம் யோசிக்கவில்லை . ஆன்லைன் கல்வி என்பது உயர்கல்வியில் சாத்தியமாகியுள்ளது . ஆனால் பள்ளிக்கல்வியில் நேரடி வகுப்புகளுக்கு இணையானதாக ஆன்லைன் வகுப்புகள் இருக்க முடியாது . பேரிடர் காலத்தில் வேண்டுமானால் பயன்படுத்தலாம் . தமிழகத்தில் பொதுப்பள்ளி முறைமையும் அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்ற நிலை வரும் போதுதான் அனைத்து மாணவர்களுக்குமான கற்றல் வாய்ப்புகள் சரிசமமாக இருக்கும் . அதுவரையில் கற்றல் முறையில் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்க முடியாது .

உமா அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்

சென்னை கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே ஆன்லைன் கல்வி முயற்சிகள் பள்ளிக் கல்வித்துறையில் தொடங்கப்பட்டன . இன்பர்மேஷன் டெக்னாலஜி ஷெல் ஒன்று செயல்பட்டது . கணினி வழிக் கல்வியின் அடிப்படைப் பயிற்சிகளை தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு வழங்கினோம் . 1500 ஆசிரியர்கள் கணினிப் பயிற்சி பெற்றனர் . அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து பயிற்சிகள் அளித்து வந்தோம் . ஆர்வமும் வரவேற்பும் ஆசிரியர்களிடம் அதிகமாக இருந்தது . சொந்தமாக லேப்டாப் , செல் போன்கள் வாங்கி மாணவர்களுக்குக் கற்பித்தார்கள் , மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தது உண்மைதான் . ஆனால் , அந்தப் பயிற்சிகள் நூறு சதவீதம் வெற்றிபெறவில்லை . பிளஸ் ஒன் , பிளஸ் டூ வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் லேப்கள் , வெர்ச்சுவல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன . ஆன்லைன் கல்வி என்ற தொலைதூர வெளிச்சத்தை அடைவதற்கு அடிப்படையாக கணினிவழி கற்றல் உள்ளது . அதற்கான முயற்சிகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருந்தாலும் முழுமையாக அதை அடையமுடியவில்லை . . நம்மிடம் செல்போன் , கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் கூட நெட்வொர்க் வசதி அடிப்படைத் தேவையாக உள்ளது . உதாரணத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் செல்போன் சிக்னலே கிடைக்காது . அங்கே ஆன்லைன் கல்வியை நாம் சாத்தியப்படுத்தும் நாளில் , தமிழகம் முழுவதும் அது வளர்ந்திருக்கலாம் . இந்திய அளவில் ஆன்லைன் கல்வி என்பது ஒரு மாயைதான் . இதனால் தாய்மொழி வழிக் கல்வி காணாமல் போகும் அபாயம் இருக்கிறது . பெரும்பாலும் அது ஆங்கில வழியாகத்தான் நடத்தப்படும் . எதிர் காலத்தில் இதுவொரு வணிகமாக மாறும் . ஒரு கல்விச் சேவையாக அதனைப் பார்க்கமுடியாது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி