10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2020

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதம் மதிப்பெண்களும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நடைமுறையை ரத்து செய்யக் கோரி, முகமது ஹுமாயூன் உள்பட எட்டு மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த தங்களால், அரையாண்டு தேர்வுக்குப் பிறகே அதை புரிந்து கொள்ள முடிந்தது எனவும் தேர்வு நடைமுறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், மார்ச் மாதத்துக்கு முன் நடத்திய திருப்புதல் (revision) தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் வெற்றி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டதாகவும், தற்போதைய நிலையில் நீதிமன்றம் தலையிட்டால், அது மாணவர்களின் மேல்நிலை படிப்புகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மாணவர்கள் நலன் கருதி, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொரோனா காலத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி