சட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2020

சட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

'பெங்களூரு தேசிய சட்ட பல்கலை நடத்திய, சட்டக் கல்வி நுழைவு தேர்வு செல்லாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.இந்தியாவில், 22 தேசிய சட்டப் பல்கலைகழகங்கள் உள்ளன. இவற்றில், ஐந்தாண்டு பி.ஏ., எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, 'கிளாட்' எனப்படும், பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு, 2020 - 21ம் கல்வியாண்டுக்கான நுழைவு தேர்வு, வரும், ௨8ம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிலையில், பெங்களூரு தேசிய சட்ட பல்கலை நிர்வாகம், 'மாணவர் சேர்க்கைக்கு, 'என்லட்' எனப்படும், தேசிய சட்ட தகுதி தேர்வு நடத்தப்படும்' என, தடாலடியாக அறிவித்தது. அத்துடன், 'கிளாட் தேர்வு எழுதினாலும், அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது' எனவும் தெரிவித்தது. இதை எதிர்த்து, பெங்களூரு தேசிய சட்ட பல்கலை முன்னாள் துணை வேந்தர், வெங்கட ராவ் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்றம், பெங்களூரு தேசிய சட்ட பல்கலை நடத்தும், என்லட் தேர்வு எழுத மாணவர்களை அனுமதித்தது. அதேசமயம், மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. அதன்படி, கடந்த, 12ம் தேதி, 'ஆன்லைன்' வாயிலாக என்லட் தேர்வு நடந்தது. நேற்று, இத்தேர்வு செல்லாது என, உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, அதிரடியாக உத்தரவிட்டது.


தீர்ப்பில் கூறியிருப்பதாவது:பெங்களூரு தேசிய சட்ட பல்கலை திடீரென தனியே என்லட் தேர்வு நடத்துவதாக அறிவித்தது சட்ட விரோதமானது. இந்த அறிவிப்பு, சட்டக் கல்வி பயிலும் ஆசையில் உள்ள ஏராளமான மாணவர்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், சட்டப் பல்கலைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்துள்ளது. பெங்களூரு தேசிய சட்ட பல்கலையின் இந்த விசித்திரமான போக்கால், மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாயினர். எனவே, தன்னிச்சையாக நடத்திய என்லட் தேர்வு செல்லாது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதனால், என்லட் தேர்வெழுதிய மாணவர்கள், மீண்டும் கிளாட் தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி