முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நீட்டிக்க கோரிய தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நீட்டிக்க கோரிய தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வை நீட்டிக்க தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், கால அவகாசத்திற்கு மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்க வேண்டுமென்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. மருத்துவ மேற்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து சில மருத்துவர்கள் தொடுத்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டும், அதில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மருத்துவப் மேற்படிப்பிற்காக மாணவர் கலந்தாய்வை செய்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


மேலும் இதுதொடர்பாக காலக்கெடு நீட்டிப்பு வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் கடந்த 2ம் தேதி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி கடந்த 4ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் கொரோனாவின் தாக்கம் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் கலந்தாய்வை நடத்தி முடிக்க மேலும் 15 நாட்கள் நீடித்து கூடுதல் அவகாசம் வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  


இதனையடுத்து தமிழக அரசின் கோரிக்கை குறித்து ஒரு நாளுக்குள் பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், நேற்றைய தினம் மத்திய அரசு 15 நாட்கள் மருத்துவப் மேற்படிப்பு கலந்தாய்வுக்காக நீட்டிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பாலின் நாரிமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாட்கள் கால அவகாசம் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி