ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் நீட் தேர்வு?- சுகாதார அமைச்சகத்துக்கு என்டிஏ கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2021

ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் நீட் தேர்வு?- சுகாதார அமைச்சகத்துக்கு என்டிஏ கடிதம்.

 

can-neet-be-held-online-twice-a-year-nta-to-health-ministry
ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைனில் நீட் தேர்வை நடத்தலாமா என்று தேர்வை நடத்தும் என்டிஏ, மத்திய சுகாதார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வைக் கடந்த ஆண்டு சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


இந்நிலையில் தற்போது தேர்வுகளை இருமுறை நடத்துவது குறித்து என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை, மத்திய சுகாதார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இதுபற்றி என்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ''கடுமையான போட்டித் தேர்வு என்பதால் இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கூடுதலான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனால் இத்தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்தினால், மாணவர்களுக்கு அழுத்தம் குறையும். எனினும் இதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனுமதி தேவை. நீட் தேர்வைப் பொறுத்தவரையில் என்டிஏ என்பது தேர்வை நடத்தும் அமைப்பு மட்டுமே.
தற்போது காகித முறையில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதை ஆண்டுக்கு இரண்டு முறை என நடத்தும்போது தேர்வுக்கு ஏராளமான ஏற்பாடுகளைக் கூடுதலாகச் செய்ய வேண்டி இருக்கும். இதனால் ஆன்லைனில் ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெற உள்ளது. ஜேஇஇ தேர்வுகளையும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி