பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2021

பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு.


 பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குறைவான மனிதவளம் இருந்தால் போதும். இந்தத் திட்டம் மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில், 24 ஆயிரத்து 930 பள்ளிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதேபோல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளிகளுக்கான விதிமுறைகள் கடந்த 1998-ம் ஆண்டு முதல் முறையாக உருவாக்கப்பட்டன. பின்னர் 2018-ல் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.



இந்நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் த்ரிபாதி கூறியுள்ளதாவது:

''பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறையை, 2006-ல் அறிமுகம் செய்தோம். தற்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.


இதன்படி விண்ணப்பத்தைப் பரிசீலித்து, அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளில், மனிதத் தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கும். குறைந்த அரசுத் தலையீடு, அதிக நிர்வாகம், தானியங்கி செயல்பாடு, வெளிப்படைத் தன்மை என்ற மத்திய அரசின் கொள்கைப்படி இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் அளிப்பதற்கான காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும்.

அங்கீகாரம் கோரி புதிய பள்ளிகள் விண்ணப்பிக்கவும், ஏற்கெனவே இயங்கும் பள்ளிகள் தரம் உயர்த்துவதற்கும் மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மூன்று முறை அவகாசம் அளிக்கப்படும். அங்கீகாரத்தை நீட்டிக்க, மார்ச் 1 முதல் மே 31 வரை பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.''

இவ்வாறு அனுராக் த்ரிபாதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி