ஏப் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2021

ஏப் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.!



ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தற்போது தான் திரும்பி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 


மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார். 


விஞ்ஞானிகள் மற்றும் உலக விஞ்ஞானிகள் அமைப்புகளின் ஆலோசனையின்படி, குறிப்பாக COVISHIELD கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை 4-வது மற்றும் 8-வது வாரத்தில் வழங்க வலியுறுத்துகிறோம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அது அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான கேடயத்தை வழங்கும் என்று தெரிவித்தார். இணை நோய்கள் இல்லாதவர்களும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 


இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,785 பேர் குணமாகி உள்ளனர். 199 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 1,16,86,796 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,60,166 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அதேசமயம், கொரோனா பாதித்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,81,253 ஆக பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி