அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2021

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருப்பவர்களுக்கு இணை பேராசிரியர்களாகவும், இணை பேராசிரியர்களாக இருப்பவர்களுக்கு பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று 2017 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்த பலருக்கும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் ஒன்றை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு செய்தது.


அந்த தீர்மானத்தின் இணைபேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பக்கூடிய உதவி பேராசிரியர்களை பொறுத்தவரை அவர்கள் ஒரு முனைவர் படிப்பை மேற்கொள்ளக்கூடிய மாணவருக்கு மேற்பார்வையாளராக இருந்திருக்க வேண்டும் என்றும் அதேபோல பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு விண்ணப்பக்க்கூடிய இணை பேராசிரியர்கள் ஒரு முனைவர் படிப்பு மாணவர் வெற்றிபெற வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும் என்ற கூடுதல் தகுதியை நிர்ணயித்து அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. 


இதன் அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக கூறி அந்த பதவி உயர்வை மறுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிண்டிகேட் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.


இந்த வழக்கில் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வு முடிவுகளுக்கு இந்த புதிய தகுதியை நிர்ணயம் செய்திருக்கும் தீர்மானம் பொறுந்தாது என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், கூடுதல் கல்வி தகுதியை நிர்ணயிக்க எல்லாவிதமான அதிகாரமும் தங்களுக்கு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், அண்ணா பல்கலைக்கழக தரப்பு வாதத்தை ஏற்கமறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் நிறைவேற்றியுள்ள தீர்மானமான இந்த கூடுதல் தகுதியை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நடைபெற்ற பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்துகொண்டவர்கள்களுக்கு அப்போது எந்த நடைமுறையை பின்பற்றி பதவி உயர்வு வழங்கி 4 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி