மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2021

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம்.

காலியாக உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்


மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

 
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக இந்த வருட இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குடிமைப் பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், "மத்திய அரசுப் பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப் படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக பொதுத் தகுதித் தேர்வு அமைந்திருக்கிறது.

இளைஞர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி வைத்திருக்கும் அக்கறையின் அடையாளமாகவும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அவரது முனைப்பின் பிரதிபலிப்பாகவும் இந்த மிகப் பெரிய சீர்திருத்தம் அமைந்திருக்கிறது.

பொதுத் தகுதித் தேர்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டு இருக்கிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு பதிலாக பொது தகுதித் தேர்வை தேசிய ஆட்சேர்ப்பு முகமை நடத்தும்.


பிரிவு பி மற்றும் சி பணியிடங்களுக்கு (தொழில்நுட்பம் சாராத) தகுதியானவர்களை தேசிய ஆட்சேர்ப்பு முகமைப் பொதுத் தகுதி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையமாவது இருக்கும் என்பதும், இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் வாழும் தேர்வர்களுக்கான அணுகல் பெரிய அளவில் மேம்படும் என்பதும் இந்த சீர்திருத்தத்தின் மிக முக்கிய அம்சம்" என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி