பொறியியல் படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2025

பொறியியல் படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன.


மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2026-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது.


இந்த முறை கேட் தேர்வை குவாஹாட்டி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 28-ல் தொடங்கி செப்டம்பர் 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2026.iitg.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிவுகள் மார்ச் 19-ல் வெளியிடப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி