கல்விக் கடன் பெற எதெல்லாம் தடையே இல்லை? - ஒரு சட்ட வழிகாட்டுதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2026

கல்விக் கடன் பெற எதெல்லாம் தடையே இல்லை? - ஒரு சட்ட வழிகாட்டுதல்

கல்விக் கடன் என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் மிக முக்கியமான சட்டப்பூர்வ ஏற்பாடாகும். இருப்பினும், நடைமுறையில் வங்கிகள் பல்வேறு காரணங்களைக் கூறி கல்விக் கடன் வழங்க மறுப்பது தொடர்கதையாக உள்ளது. இத்தகைய சூழலில், இந்திய நீதிமன்றங்கள் மாணவர்களின் பக்கம் நின்று, அவர்களின் சட்டரீதியான உரிமைகளை நிலைநாட்டும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளைக் கூறியுள்ளன.

இந்தியாவில் உயர் கல்விக்கான செலவு விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தகுதியுள்ள மாணவர்களுக்குக் கடன் வழங்குவது வங்கிகளின் சமூகக் கடமையாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கல்விக் கடன் என்பது ‘முன்னுரிமைத் துறை கடன்’ பிரிவின் கீழ் வருகிறது. அதாவது, வங்கிகள் தங்களின் மொத்தக் கடனில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தகுதியான மாணவர்களுக்கு வழங்கியே ஆக வேண்டும்.

எனினும், ஏதேனும் காரணங்களைக் கூறி வங்கிகளால் கல்விக் கடன் மறுக்கப்படும் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுபோன்ற தருணங்களில் நீதிமன்றங்களை நாடும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

பல நேரங்களில் மாணவர்களின் பெற்றோருடைய சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாகக் கூறி வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், ‘கல்விக் கடன் என்பது மாணவரின் எதிர்கால வருமான ஈட்டும் திறனை அடிப்படையாகக் கொண்டது. பெற்றோரின் கடன் வரலாறு அல்லது சிபில் ஸ்கோரைக் காரணம் காட்டி மாணவர்களின் கல்விக்கனவை வங்கிகள் சிதைக்கக் கூடாது’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் Management Quota மூலம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் கடன் வழங்க மறுக்க முடியாது என நீதிமன்றங்கள் கூறியுள்ளன. ‘கல்வி நிறுவனங்கள் மாணவரைச் சேர்த்துக் கொண்ட பிறகு, அந்த மாணவர் கடனுக்குத் தகுதியற்றவர் என வங்கிகள் தீர்மானிக்க முடியாது’ என்பதே நீதிமன்றங்களின் நிலைப்பாடு.

பெற்றோர்கள் ஏற்கெனவே வங்கியில் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், அதைக் காரணம் காட்டி பிள்ளைகளுக்குக் கல்விக் கடன் மறுக்கப்படக் கூடாது. கடன் என்பது தனிநபர் சார்ந்தது, குடும்பப் பின்னணி சார்ந்தது அல்ல என்று பல தீர்ப்புகள் வலியுறுத்துகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி