PF ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2026

PF ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ( PF) திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை தற்போதைய 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிகளின்படி, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெறுவோர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் கட்டாயமாக சேர வேண்டும். இதற்கு மேல் சம்பளம் பெறுவோர் விருப்பத்தின் பேரில் சேரலாம். 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இந்த விதி கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது.

தற்போது 15,000 ரூபாய் சம்பள வரம்பின் அடிப்படையில், பணியாளர் 12 சதவீதமாக 1,800 ரூபாய் பங்களிப்பு செய்கிறார். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பை வழங்குகிறது. இதில், 3.67 சதவீதம் பி.எப். கணக்கிலும், 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிஎப் திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, நாளை விஸ்வகர்மா ஜெயந்தி. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுத்துள்ளார். தற்போதைய பி.எப். விதிகளின் படி சம்பள வரம்பு 15 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது. இந்த வரம்பு 2014 ல் நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது இந்த வரம்பை 25 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி உள்ளோம். 25 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் பெறுபவர்களும் பி.எப். வரம்பில் வருவார்கள். இதனால் 51 லட்சம் பணியாளர்கள் பலன்பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 11,339 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். என்று அவர் கூறியுள்ளார்.

சம்பள வரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், பணியாளரின் மாதாந்திர பி.எப்., பங்களிப்பு 3,000 ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும். இதன் வாயிலாக, பணியாளரின் பி.எப். சேமிப்பும், ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பும் அதிகரித்து, நீண்டகால சமூக பாதுகாப்பு வலுப்பெறும். நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்த பிறகு புதிய விதிமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி