மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு.


கன்னியாகுமரியைச் சேர்ந்த, மறைந்த ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின், 2 மனைவி களுக்கும் சமமாக பங்கிட்டு, குடும்ப ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும், என அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கீழ்கல்குறிச்சியை சேர்ந்த விசாலாட்சியம்மா தாக்கல் செய்த மனு எனது கணவர் ஸ்தாணு நாதன் தம்பிக்கும், எனக்கும் 1958 ல், திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என்னை கைவிட்ட அவர், 1965ல், வசந்தகுமாரி தங்கச்சியை திருமணம் செய்தார். அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஸ்தாணு நாதன் தம்பி முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றார். அவர், 2012 ல் இறந்தார்.குடும்ப ஓய்வூதியப் பலன்கள் கோரி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சென்னை "அக்கவுன்டன்ட் ஜெனரல்' அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன். அவர்கள், "குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாரிசுதாரராக, வசந்தகுமாரி தங்கச்சியைஸ்தாணு நாதன் தம்பி நியமித்துள்ளார்,' என, நிராகரித்தனர். என்னிடம், அவர் சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரவில்லை. 2 வது மனைவியை வாரிசுதாரராக நியமிக்க முடியாது.

எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.மகாதேவன் முன் மனு விசாரணைக்கு வந்தது. வசந்தகுமாரி தங்கச்சியின் தரப்பில்," ஸ்தாணு நாதன் தம்பியை திருமணம் செய்து, அவருடன் 47 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளேன். கடைசிவரை, அவரை பராமரித்தேன். குடும்ப ஓய்வூதியம் பெற எனக்கு தகுதி உண்டு,' என வலியுறுத்தப்பட்டது. நீதிபதி: பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டப்படி, ஒரே வீட்டில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தாலும், திருமணம் செய்து அல்லது விருப்பத்தின் அடிப்படையில் இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும், அதைகுடும்பமாகத் தான் கருத வேண்டும். மனைவியாக வசந்தகுமாரி 47 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அதனால் தான், அவரை வாரிசுதாரராக ஸ்தாணு நாதன் தம்பி நியமித்துள்ளார்.சட்டப்படி மனைவியாக இருந்தாலும், அல்லது ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தாலும், பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும்.

வருவாய் ஈட்டும் கணவர் இறந்துவிட்டால், குடும்பம் நல்லநிலையில் வாழ்வதற்காகத் தான், குடும்ப ஓய்வூதியத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வழக்கின் சூழ்நிலை வேறு. விசாலாட்சியம்மா மற்றும் வசந்தகுமாரி தங்கச்சிக்கு சமமாக பங்கிட்டு, குடும்ப ஓய்வூதியப் பலன்களைவழங்க வேண்டும். இதில் ஒருவர் முதலில் இறந்துவிட்டால், உயிருடன் உள்ளவருக்கு முழுத் தொகையையும், அரசு வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி