TNPSC GROUP 1 இல் அசத்திய பெண்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2014

TNPSC GROUP 1 இல் அசத்திய பெண்கள்.

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சமீபத்தில் வெளியிட்ட குரூப் 1 தேர்வில், மொத்தமுள்ள 25 பதவி இடங்களில் 15 இடங்களைப் பிடித்து அபார சாதனை படைத்துள்ளனர் பெண்கள். 75,629 பேர் எழுதிய இந்தப் போட்டித் தேர்வில்... முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களும் பெண்களே!
துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரிகள் துறை உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 25 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றவரும் இங்கே பேசுகிறார்கள்.

முதல் முயற்சியிலேயே வெற்றி!
24 x 7 மைக்குகளின் ஓயாத அலறல், எந்நேரமும் குழாயடி சண்டை போன்ற பல சச்சரவுகள்... இத்தகைய சூழலுக்கு நடுவே வாழ்ந்தாலும், முதல் முயற்சியிலேயே துணை ஆட்சியர் பதவியைப் பிடித்திருக்கிறார், சென்னை, வியாசர்பாடி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு திவ்யஸ்ரீ.

''2012-ம் வருஷம், கொளப்பாக்கம் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரியில் டிகிரியை முடிச்ச கையோட, நான் எழுதின அத்தனை அரசு தேர்வுகளிலும் எனக்கு வெற்றிதான். காரணம், தேர்வுக்காக கட்டாயத்தில் படிக்காம, நம்ம நாட்டைப் பத்தி தெரிஞ்சுக்கிறோம்னு ஆர்வத்துல படிச்சேன்.
சொல்லப்போனா, நம் அரசாங்கத்தின் திட்டங்களையும், அதன் அமைப்பையும் படிக்கும்போது வந்த அதீத ஆர்வமே, அரசு உயர் அதிகாரி என்ற என் லட்சியமா மாறிச்சு. அப்பா, அம்மா ரெண்டு பேரும் அரசு ஊழியர்கள் என்பதால், அரசு இயந்திரத்தின் சாதக பாதகங்களை எல்லாம் சின்ன வயசிலிருந்தே கவனிச்சுட்டு வர்றேன். அங்கங்க இருக்கிற பாதகங்களை எல்லாம் சாதகமா மாற்றி மக்களுடன் இணைந்த அரசை உருவாக்குவதுதான் என்னோட கனவு'' என்று சொல்லும் திவ்யஸ்ரீ,

''என்ன படிக்கணும், எப்படிப் படிக்கணும்னு என்கிற சூட்சமம் எல்லாம் தெரிஞ்சு கிட்டு, 100 சதவிகிதம் விடாமுயற்சியோட உழைப்பைக் கொடுத்தா... எல்லாராலும் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற முடியும். தியானம் அல்லது யோகா போன்றவற்றை தினமும் சில நிமிடங்கள் செய்வது, நேர்முகத்தேர்வின் போது வரும் தேவையில்லாத பயத்தைக் குறைக்க உதவும்’' என்று டிப்ஸ் தரும் திவ்யஸ்ரீ, பல்வேறு அமைப்புகளிலுள்ள பார்வையற்றவர்கள், வசதியற்ற மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார்.

'தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் அப்பா ராகையா, நியாயவிலைக் கடையில் வேலை செய்யும் அம்மா லட்சுமி தேவி, ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடமியைச் சேர்ந்த ராஜ பூபதி, ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.ஏஸ், தியான மாஸ்டர் ஜெயந்தி ஜீவன்னு... இவங்க எல்லாருக்கும் என் வெற்றியில் பங்குண்டு!'' என்ற திவ்யஸ்ரீயின் கண்களில், லட்சிய வெறி!


''மாமனார், மாமியாருக்கு நன்றி!''

'முயற்சி, இடைவிடாத பயிற்சி... இதுதான் வெற்றிக்கான பார்முலா!' என்கிறார், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, மாவட்ட துணைஆட்சியர் பதவியை தேர்ந்தெடுத்திருக்கும் சென்னை, அசோக் நகர், கீதாபிரியா.

''நீ போயிட்டு வாம்மா, நான் குழந்தையைப் பார்த்துக்கிறேன்’னு சொல்லி, என்னை வெற்றிபெற வைத்தவங்க, மாமனார் - மாமியார்தான். எம்.பி.ஏ. முடிச்சிட்டு எல் அண்ட் டி நிறுவனத்துல 2010 வரை வேலை பார்த்துட்டு இருந்தேன். குரூப் 1 தேர்வெழுதறதுக்காக, வேலையை விட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். 

முதல் முயற்சியில் குரூப் 2 தேர்வானேன். குடும்பத்துல எல்லாரும் உற்சாகப்படுத்த, மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து முழு வீச்சா படிச்சேன். அதுக்குப் பரிசுதான், இந்த துணை ஆட்சியர் பதவி'' எனும் கீதாபிரியாவின் கணவர் கார்த்திகேயன், மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிகிறார். இவர்களுக்கு, ஹிரண்மயி எனும் ஐந்து வயது மகள் உள்ளார்.
''குடும்பத்தையும், படிப்பையும் பேலன்ஸ் பண்ண டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம். அதுவும், இரண்டாம் நிலை தேர்வுக்கு தினமும் கட்டாயம் படிக்கணும். அதோடு, மக்களுக்கு நாம சேவை செய்யப் போறோம்ங்கிற உந்துதலோட படிச்சா, எந்த தடையையும் தாண்டி வந்துடலாம்!'' என்கிறார் கீதாபிரியா, நம்பிக்கையாக.

'ஹோம் மேக்கர்... ஆகலாம், அட்மினிஸ்ட்ரேட்டர்!’

''கல்யாணத்துக்கு அப்புறமும் பெண்கள் நினைத்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம்ங்கிறதுக்கு நானும் ஓர் உதாரணம்'' என்று தெம்பாகச் சொல்கிறார் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள நெய்வேலியைச் சேர்ந்த டீனாகுமாரி. இவரும் மாவட்ட துணைஆட்சியர் பதவியையே பிடித்திருக்கிறார்!
''கோவை, பி.எஸ்.ஜி-யில் பி.டெக். முடிச்சி... டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை செய்துகிட்டுஇருந்தேன். ஆனா, என்னோட கனவெல்லாம் அரசு அதிகாரியாகி, மக்களுக்கு தொண்டு செய்யணும்ங்கிறதுதான். 

அதற்கு முழு ஒத்துழைப்பையும் என் கணவர் தர, கூடுதல் பக்கபலமா அப்பா, அம்மா ரெண்டு பேரும் இருந்தாங்க. 2011-ம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதினேன். ஆனா, தேர்வாகல. தவறுகளைக் கண்டறிந்து சரிசெய்து, சின்ஸியரா படிச்சேன். அதே ஆண்டில் குரூப் 2 தேர்வில் தேறிட்டேன். ஆனாலும், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றே ஆகணும்ங்கிற வைராக்கியத்தோட, இன்னும் அதிக உழைப்பைக் கொடுத்துப் படிச்சேன். அதுக்கான பலன் இப்போ கிடைச்சிருச்சி'' எனும் டீனாகுமாரியின் கணவர் ராஜா சரவணன், 'விப்ரோ' நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் ஷரண் என்ற மகன் உள்ளார்.
''படிப்பை முடிச்சி, ரொம்ப நாள் இடைவெளி விட்டாச்சி. 

இனி பரீட்சை எல்லாம் எழுதி பாஸாக முடியுமானு யோசிச்சே காலத்தை வீணாக்காம, சரியான திட்டமிடலும், கடுமையான உழைப்பும் இருந்தா... திறமை இருக்கிற அத்தனை ஹோம்மேக்கரும், அட்மினிஸ்ட்ரேட்டர் ஆகலாம்.
இல்லத்தரசிகள், தினமும் வேலைக்கான நேரம் போக, படிப்புக்குனு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்க. படித்ததை அடிக்கடி ரிவைஸ் செய்றது ரொம்ப முக்கியம். கல்லூரி படிப்பு போல சில புத்தகங்களோட மட்டும் முடங்கிடாம, ஒவ்வொரு பாடத்துக்கும் பாடம் சம்பந்தமான பலதரப்பட்ட விஷயங்களைத் தெரிஞ்சி வெச்சிருந்தாதான், போட்டித் தேர்வை துணிச்சலா எதிர்கொள்ள முடியும்.

குடும்பம், நண்பர்களைத் தவிர, சென்னையிலுள்ள மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் கொடுக்கப்பட்ட சரியான வழிகாட்டுதலும் எனக்கு பெரும் உறுதுணையா இருந்துச்சி'’ என்று சொல்லும் டீனாகுமாரி, கடந்த எட்டு மாதங்களாக வணிகவரித் துறையில் பணிபுரிந்து கொண்டே, தீவிரமாகப் படித்துள்ளார்.

4 comments:

  1. உண்மையான உழைப்பிற்கு எப்போதும் எங்கேயும் மதிப்புள்ளது...அதுவே இங்கு சாதனையாக மிளிர்ந்துள்ளது...

    அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Man sir.. this article is from "Aval Vikatan" right? Thanks for publishing it..

    ReplyDelete
  3. உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை
    --- தின மலர் நாளேடு

    "உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாகிகள், உயர்கல்வித்துறை செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

    அதற்கான தகுதிகளாக, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' தேர்ச்சி மற்றும் பி.எச்.டி., பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேனும் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தால், அப்பணிக் காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வீதம், 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதியான, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' மற்றும் பி.எச்.டி., போன்றவற்றை முடித்துள்ளனர். ஆனால், அவர்களால், உதவிப் பேராசிரியர் பணிக்கு, செல்ல முடியவில்லை. ஏனெனில், அவர்களின் பணிக்காலம், கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. எனவே, அவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு, தகுதி பெற்ற காலம் முதல், அவர்களின் பணிக்காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கான தனி அரசாணையை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பிலும், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  4. இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு; 20 ஆயிரம் இடங்கள் "போணி' ஆகுமா?
    -- தின மலர் நாளேடு

    இரண்டாண்டு, ஆசிரியர் பயிற்சி படிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு, வெறும், 9,000 பேர் தான், இந்த படிப்பில் சேர்ந்தனர். இதனால், இந்த ஆண்டு, ஆசிரியர் பயிற்சி இடங்கள், பெரிய அளவிற்கு, "போணி' ஆகுமா என, தெரியவில்லை.
    மோகம் குறைந்துவிட்டது பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, "காஸ்ட்லி'யான படிப்பாக, ஆசிரியர் பயிற்சி படிப்பு இருந்தது. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 3 லட்சம் ரூபாய் வரை, இடங்களை விற்றனர். அந்தளவிற்கு, ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, முட்டி மோதினர். கடந்த, ஐந்து ஆண்டுகளில், எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனம் மாறி, மாநில பதிவு மூப்பாக மாறியது. தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது. முக்கியமாக, அரசு ஆரம்ப பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இடைநிலை ஆசிரியர் நியமனம், மிக குறைவாக நடக்கிறது. இதனால், இந்த படிப்பு மீது, மாணவர் மத்தியில், மோகம் முற்றிலும் குறைந்துவிட்டது.

    50 பள்ளிகள் மூடல் : இதனால், ஆண்டிற்கு, 10 ஆயிரம் பேர் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்கின்றனர். "போணி' ஆகாத, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, 50க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழலில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்காக, வரும், 14ம் தேதி முதல், ஜூன், 2ம் தேதி வரை, முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும், 37, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகள், 42, தனியார் பள்ளிகள், 400ம்
    உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 6,000 இடங்கள் உள்ளன. மொத்த இடங்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்த இடங்கள், எந்தளவிற்கு, "போணி'
    ஆகும் என, தெரியவில்லை.

    "சீட்' கிடைக்க வாய்ப்பு : கடந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்திலும் சேர்த்து, வெறும், 9,000 மாணவர்கள் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தனர். இதில், அரசு பள்ளிகளில், 2,100 பேர் சேர்ந்தனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, சேர்க்கை குறையுமா, அதிகரிக்குமா என, தெரியவில்லை. எனினும், சேரும் மாணவர்களில், பெரும்பாலானோருக்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தாராளமாக, "சீட்' கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி