பள்ளி வகுப்பறையில் மது அருந்திய பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2014

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் நீக்கம்

பள்ளி வகுப்பறையில் மது அருந்தியதாக பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம், முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த விழா நடைபெற்றது. அப்போது, பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்திவிட்டு ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இது விழாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் லோகநாதன் அந்த 6 மாணவர்களையும் அழைத்து விசாரித்தபோது, அவர்களில் சிலர் மது குடித்திருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 6 பேரையும் பள்ளியிலிருந்து நீக்கி தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். அவர்களில் ஒரு மாணவர் மட்டும் வேறொரு அரசுப் பள்ளியில் சேர்ந்து கொண்டார். மற்ற 5 பேரும் வேறு பள்ளிகளில் சேரச் சென்ற போது அங்குள்ள தலைமை ஆசிரியர்கள் மறுத்துவிட்டனராம்.

இந்த நிலையில், அவர்களில் 3 மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.

முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் கொல்லிமலைக்கு ஆய்வுப் பணிக்குச் சென்று விட்டதால், மாணவர்களின் பெற்றோர்களால் அவரைச் சந்தித்து முறையிட முடியவில்லை.

இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்களைச் சந்தித்து முறையிட்டனர்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் கூறுகையில், 6 மாணவர்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமை ஆசிரியர் கூறினார்.

மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களை அழைத்துப் பேசி உரிய அறிவுரை அளிக்கப்படும். மற்ற 5 மாணவர்களும் வெவ்வேறு அரசு பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி