அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலைவெளியிட வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலைவெளியிட வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


அரசுப் பணிகளுக்கான அனைத்து எழுத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு தொழில் துறை சார்புப் பணிகளில் உதவிப் பொறியாளர் பணிகளுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிட்டு, ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தியது. நேர்காணலும் இந்தத் தேர்வு முறையில்உண்டு.இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு தேர்வாளர்கள் பெயர்களுடன் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது.அதன் பிறகு, நேர்காணலுக்கு வருமாறு கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது.இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்ட தங்களை நேர்காணலுக்கு அழைக்கவில்லை எனவும், எழுத்துத் தேர்வின் மதிப்பெண்களை வெளியிடவில்லை எனவும் கூறி, எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகிய இருவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கோரினர்.இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 82 தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தவர்களை மட்டுமே அடுத்து நேர்காணலுக்கு அழைத்துள்ளனர். வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்கள் குறைந்த அளவே மதிப்பெண் பெற்றுள்ளனர். இருந்தாலும், டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறை திருப்தியளிக்கவில்லை.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்த பின்னர் நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணலுக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு தேவையில்லாதது. மேலும், பல ஆயிரம் பேர் எழுதுகிற குரூப்-4 எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்படுகின்றன. குறைந்த அளவு தேர்வு எழுதிய உதவிப் பொறியாளர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்படாதது சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே, அரசுப் பணிகளில் அதிக அளவு மதிப்பெண் பெற்ற தேர்வர்களை நேர்காணலுக்கு அழைக்கும் முன், எழுத்துத் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் வெளியிட வேண்டும்.இதன்மூலம் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும். எனவே, உதவிப்பொறியாளருக்கான தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

1 comment:

  1. TNPSC நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் இதுபோல் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு தேர்வரும் தான் பெற்ற மதிப்பெண்ணை அறிந்துகொள்ள முடியும். இதனால் தேர்வும் மிக மிக வெளிப்படைத் தன்மையாக இருக்கும். தற்கால புதிய தொழில்நுட்பங்கள் அனைத்திற்குமே வழிவகை செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி