இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன.!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2015

இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன.!!

அண்ணா பல்கலை நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தும், மாநிலம் முழுவதும், பல கல்லுாரிகளில், ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. போதிய மாணவர் சேர்க்கை இல்லாத இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில், 581 இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகள் உள்ளன.


இவற்றுள், 40 சதவீத தனியார் கல்லுாரிகளில், மிக குறைந்த அளவுக்கேமாணவர்கள் சேர்கின்றனர். தரமில்லாத, வசதியில்லாத கல்லுாரிகளை, கவுன்சிலிங் நிலையிலேயே மாணவர்கள் புறக்கணித்து விடுகின்றனர். அண்ணா பல்கலையில்...: நடப்பு கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங், சமீபத்தில், அண்ணா பல்கலையில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள, 2 லட்சம் இடங்களில், 1.07 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின; 94 ஆயிரம் இடங்கள் காலி என, அறிவிக்கப்பட்டது.


அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டிலும், கல்லுாரிகளில், 50 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட அளவுக்கு மாணவர்கள் சேராததால், அதிக இடங்கள் காலியாக இருக்கும், 50க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள், தங்கள் கல்லுாரிகளை, கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளாக மாற்ற முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக, பல கல்லுாரிகள், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் உதவியை நாடியுள்ளன. ஆனால், 'இன்ஜினியரிங் கல்லுாரிகளை, கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்றுவதில், சட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் அவற்றைசரி செய்யுங்கள்' என, கல்லுாரி நிர்வாகங்களுக்கு, யு.ஜி.சி., அறிவுரைவழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சிக்கல் என்ன? இதுதொடர்பாக, அண்ணா பல்கலை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்த தகவல்: பி.இ., - பி.டெக்., படிப்பை நடத்தி வரும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்தையோ, அங்கீகாரத்தையோ திடீரென ரத்து செய்ய முடியாது.


முதலில், மாணவர் சேர்க்கையை நிறுத்திக் கொள்ள, அண்ணா பல்கலை மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி பெற வேண்டும்.அதேநேரத்தில், ஏற்கனவே சேர்ந்த மாணவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். நான்காம் ஆண்டு மாணவர்கள் வெளியேறிய பிறகே, கலை, அறிவியல் கல்லுாரியாக மாற்றவோ அல்லது கல்லுாரியை இழுத்து மூடவோ முடிவு செய்யலாம்; அதுவரை கல்லுாரியை நடத்தியே ஆக வேண்டும். இல்லையெனில், தங்கள் மாணவர்களை வேறு கல்லுாரிகளுக்கு மாற்ற வேண்டும். அதற்கு, மாணவர்களும், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். பின், அண்ணா பல்கலை, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் தடையில்லா சான்று பெற்று, அங்கீகாரத்தை வாபஸ் தரலாம்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடத்துவது சாத்தியமா? தமிழககல்லுாரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரியாக மாற வேண்டும் எனில், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையின் தடையில்லா சான்று மற்றும் அங்கீகார ரத்து கடிதம்பெற்று, தமிழக கல்லுாரி இயக்குனரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின், கல்லுாரி இயக்க கத்தின், 25 விதிமுறைகளை பூர்த்தி செய்தால், முதற்கட்டமாக, ஐந்து பாடப்பிரிவுகளை நடத்த அனுமதி அளிக்கப்படும்.


அடுத்து, கல்லுாரிகள், எந்த பல்கலை இணைப்பில் இருக்க விரும்புகின்றனவோ, அங்கு விண்ணப்பித்து இணைப்பு பெற வேண்டும். இணைப்பு பெறும்போது, யு.ஜி.சி.,க்கும்விண்ணப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும். இதன்பின்னரே, மாணவர்களை சேர்க்க முடியும். கல்வியியல் படிப்பான இரண்டு ஆண்டு பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்பை நடத்த, தமிழ்நாடு கல்வியியல் பயிற்சி பல்கலையில் இணைப்பு பெற்று, தேசிய கல்வியியல் பயிற்சி கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி