சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டது எப்படி? பதில் அளிக்கும்படி தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2015

சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டது எப்படி? பதில் அளிக்கும்படி தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற் தகுதித் தேர்வில் கலந்து கொண்டவர்களின் மார்பளவில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


உடற்தகுதி தேர்வு


சென்னை தியாகராய நகரை சேர்ந்த பி.அருண், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், ‘நான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத்தொடர்ந்து நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் மார்பு அளவு எடுக்கப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு சாதாரண நிலையிலும், விரிவாக்கம் செய்யும்போதும் எனக்கு மார்பு அளவு இல்லை என்று கூறி தகுதியிழப்பு செய்து விட்டனர். விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் பூர்த்தியாகவில்லை என்றால், அந்த இடங்கள் காவல்துறையினரின் வாரிசுகளால் நிரப்பப்படும். அதற்காகவே என்னை வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்துவிட்டனர்’ என்று கூறியிருந்தார்.


அறிக்கை தாக்கல்


அதேபோல, இதே கோரிக்கையுடன் இளங்கோவன், பூபதிபாண்டியன் உட்பட 5 பேர் தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு பதிவாளர் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில், மனுதாரர்களின் மார்பளவை மீண்டும்அளந்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இதன்படி, நேற்று காலையில் 6 பேரது மார்பளவு நீதிபதி வேல்முருகன் முன்பு அளக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து நீதிபதி வேல்முருகன் அறிக்கை ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


உறுப்பினர் செயலர் ஆஜர்


அப்போது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் வினித் தேவ் வாங்க்டே ஆஜராகி, சப்–இன்ஸ்பெக்டர் தேர்வில் மார்பளவை அளந்தது குறித்து விவரங்களை எடுத்துக் கூறினார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், மனுதாரர் கணேசனுக்காக வழக்கறிஞர் சுபாஷிணி உட்பட பலர் ஆஜரானார்கள். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–


மனுதாரர் இளங்கோவனுக்கு 3–8–15 அன்று மார்வு அளவு எடுத்தபோது சாதாரண நிலையில் 96 சென்டி மீட்டரும், விரிவாக்க நிலையில் 98.5 சென்டி மீட்டரும் இருந்துள்ளது. 2.5 சென்டி மீட்டர் வித்தியாசம். ஆனால் நீதிபதி முன்னிலையில், அவருக்கு மார்பு அளவு எடுத்தபோது சாதாரண நிலையில் 94 சென்டி மீட்டரும், விரிவாக்க நிலையில் 105 சென்டி மீட்டரும் இருந்திருக்கிறது.


பதிலளிக்க வேண்டும்


அதாவது 11 சென்டி மீட்டர் வித்தியாசம் உள்ளது. இது மிகப்பெரிய வேறுபாடு ஆகும். ‘ஒரு மாதத்தில் தேவையான அளவுக்கு மார்பு அளவை அதிகப்படுத்திக் காட்ட முடியும்’ என்பது குறித்து உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்வதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். இந்த வேறுபாடு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.எனவே, மனுதாரர்கள் இளங்கோவன், கணேசன் ஆகியோரது மனுக்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க வேண்டும். பி.அருண் உள்ளிட்ட 4 மனுதாரர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கின் விசாரணையை வருகிற 21–ந் தேதிக்கு தள்ளி வைக்கின்றோம்.


இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி