18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2015

18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


இப்போதுள்ள விதிகளின் படி ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனவரி2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், தேர்தல் நடைபெறும்போது 18 வயதை எட்டியிருந்தாலும் கூட அந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியாது.எனவே இதனை மாற்றி, 18 வயதை எட்டிய அனைவரையும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள், தேர்தல்ஆணைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.அதேநேரத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பெரிய அளவில்ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது இந்த விஷயத்தில் உதவாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.


இப்போதுள்ள விதிகளின்படி 18 வயதை எட்டியவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை பரிசீலித்தது. அப்போது சட்ட அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் சட்ட அமைச்சகத்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவுடன் முரண்படுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி