பி.எஃப். பென்ஷன்... யாருக்கு எவ்வளவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2015

பி.எஃப். பென்ஷன்... யாருக்கு எவ்வளவு?

பிராவிடெண்ட் ஃபண்ட் என்கிற பி.எஃப். என்பது ஓய்வுக்காலத்துக்கான முதலீடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் (ஃபேமிலி பென்ஷன்) வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பென்ஷன் தொகை எவ்வளவு? பென்ஷனுக்கான தகுதி என்ன? என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது.
இந்த சந்தேகங்களுக்கு விடை தேடி, வருங்கால வைப்பு நிதி அமைப்பின்சென்னை மண்டல கமிஷனர் எஸ்.டி.பிரசாத்-ஐ சந்தித்துப் பேசினோம்.


''ஒரு தனியார் நிறுவனத்தில் 20 நபர்களுக்கு மேல் வேலை பார்த்தால் கட்டாயம் பி.எஃப். பிடித்தம் செய்யவேண்டும் என்பது அரசின் விதி. இந்த விதியின் கீழ் தொழிலாளரின் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் டி.ஏ. சேர்ந்தது) 12 சதவிகிதமும், அதே அளவு தொகையை நிறுவனமும் கட்டாயம் தொழிலாளரின் பெயரில் செலுத்த வேண்டும். நிறுவனம் தரும் 12 சதவிகித தொகையில் 8.33% பென்ஷன் திட்டத்திற்காகவும், 3.66%(அதிகபட்சமாக 6,500 ரூபாய் சம்பளத்தில் மட்டுமே) வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்காகவும் பிரித்து வரவு வைக்கப்படும். இதில் பென்ஷனுக்காக அதிகபட்சம் ஒரு தொழிலாளியின் கணக்கில் மாதம்541 ரூபாய் மட்டுமே வரவு வைக்கப்படும். இந்தத் தொகையிலிருந்து தொழிலாளி ஓய்வு பெறும்போது மாதா மாதம் பென்ஷனாக கிடைக்கும்.தொழிலாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971-க்கு மாற்றாக 1995-ம் ஆண்டு தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு முன் உள்ள திட்டத்தின் கீழ் உறுப்பினர் மரணமடைந்தால் குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1995-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் உறுப்பினருக்கு 50 வயதுக்கு பிறகு விருப்ப ஓய்வு ஊதியமும், 58 வயதுக்குப் பிறகு கட்டாயம் ஓய்வூதியமும் கிடைக்கும்.


பென்ஷன் பெறுவதற்கு குறைந்தபட்ச தகுதி என்பது வயது மற்றும் பணிக்காலம்தான். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பி.எஃப். கணக்கு வைத்திருப்பதோடு குறைந்தபட்சம் 50 வயதாகி இருக்க வேண்டும்.தொழிலாளர்கள் பலருக்கும் பென்ஷன் குறித்த விழிப்பு உணர்வு இல்லாத காரணத் தினால் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குச் செல்லும்போது பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் 10 ஆண்டுகளுக்கு குறைவாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பென்ஷனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறிப்பிட்ட சதவிகிதத்தில் திரும்பக் கிடைக்கும். (சம்பளத்தில் எவ்வளவு மடங்கு என்பதை மேலே உள்ள அட்டவணையில் பார்க்க).ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபிறகு வேறு நிறுவனத்திற்கு வேலை மாறுகிறார் அல்லது சொந்ததொழில் செய்கிறார் அல்லது இனிமேல் வேலைக்குப் போகவேண்டாம் என்றுமுடிவெடிக்கும் சூழ்நிலையில் அவரின் வயது 50-க்கு குறைவாக இருந்தால் பென்ஷன் கணக்கில் இருக்கும் தொகை உடனடியாகக் கிடைக்காது.


இதற்கு பதிலாக பி.எஃப். அலுவலகத்திலிருந்து திட்ட சான்றிதழ் (ஸ்கீம் சர்ட்டிஃபிகேட்) வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் எத்தனை வருடம் வேலை பார்த்தீர்கள், உங்கள் கணக்கில் எவ்வளவு பென்ஷன் தொகை உள்ளது, எந்த தேதியிலிருந்து நீங்கள் பென்ஷன் பெற முடியும் என்பது புரியும். இரண்டு, மூன்று திட்டச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அனைத்துச் சான்றிதழ்களையும் பி.எஃப். அலுவலகத்தில் தந்து கூட்டுத் தொகையை பென்ஷனாகப் பெறலாம். சுமார் ரூ.3,500 வரை அதிகபட்சமாக பென்ஷன் கிடைக்கவாய்ப்புண்டு.பென்ஷன் திட்டத்திற்கு நாமினி நியமன வசதி உள்ளது. இதன்படி ஓய்வூதியம் பெறும் தொழிலாளர் இறந்துவிட்டால் பென்ஷன் தொகை மனைவிக்கு ஆயுள் முழுக்கவும், இரு குழந்தைகளுக்கு அவர்களின் 25 வயது வரைக்கும் பென்ஷன் கிடைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நிரந்தர ஊனம் இருந்தால் ஆயுட்காலம் முழுக்க பென்ஷன் கிடைக்கும். ஒரு தொழிலாளிக்கு திருமணம் ஆகாத நிலையில், உறவினர் யாரும் இல்லை எனில் அவர் மரணம் அடைந்தால் அவருடைய பெற்றோருக்கு பென்ஷன் தரப்படும். தொழிலாளர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டாலோ, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ பென்ஷன் கிடைக்கும்.


இதுபோன்றோருக்காக மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.பி.எஃப். பென்ஷன் பெறுபவர் மரணம் அடைந்தபிறகு அவரது துணைவர் (கணவன் அல்லது மனைவி) அரசு வேலை பார்த்து அதன் மூலம் பென்ஷன் கிடைத்தாலும், அவர்களுக்கு இந்த பி.எஃப். பென்ஷனும் கிடைக்கும்.பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஆரம்பம் முதலே எந்த வட்டியும் அரசு வழங்குவதில்லை.

- இரா. ரூபாவதி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி