'செல்பி' பிரியரா நீங்கள்? மனநோய் பாதிக்கும் அபாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2015

'செல்பி' பிரியரா நீங்கள்? மனநோய் பாதிக்கும் அபாயம்

காலையில் கண் விழித்ததும், 'பேஸ்புக்'கில், 'குட்மார்னிங்' என பதிவிட்டு, எத்தனை, 'லைக்' விழுந்திருக்கிறது என பார்த்துவிட்டு பல் துலக்கச்செல்வோரும் உள்ளனர். இணைய தள அடிமைகளாக, இன்றைய தலைமுறை மாறிவிட்டதோ என்றே அஞ்சும் அளவுக்கு, அவற்றின் உபயோகம் எல்லைமீறிவிட்டது.குடும்ப உறுப்பினர்களுள் ஆரோக்கியமான உரையாடல்களும், ஆனந்தமாக பேசி பொழுது போக்கும் நகைச்சுவை பேச்சுக்களுக்கும், இப்போதைய அவசர உலகில், அவசியமில்லாமல் போய்விட்டது.


பலரும் 'பேஸ்புக்', 'டிவிட்டர்' போன்ற இணையதள இடிபாடுகளில் சிக்கி பொழுதை போக்கிவருகின்றனர்.போதாக் குறைக்கு, 'செல்பி' மோகம் வேறு. உயரமானகட்டடத்தின் மீதேறி, பார்ப்போர் நடுங்கும் வகையில், தன்னுயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறுகையில், 'செல்பி' எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவது;ஓடும் ரயில் அருகில் நின்று, தங்களை தாங்களே படமெடுத்து பதிவேற்றம் செய்வது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. அதையும் பார்த்து பலரும் 'லைக்' போடுகின்றனர். தான் இட்ட பதிவுகளுக்கு எதிர்பார்த்த அளவில் 'லைக்' விழாவிடில், 'லைப்'பே முடிந்து போனதாக கருதி, அன்றைய பொழுதை கவலையில் கழிப்போரும் உள்ளனர்.கம்ப்யூட்டர், மொபைல்போன்களுக்கு அடிமையாகி திரியும் நபர்களுக்கு, இணைய அடிமையாதல் நோய் (Internet Addiction Syndrome) என்ற மனநோய் பாதிப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தருகின்றனர் மனநல டாக்டர்கள்.


'செல்பி' மோகம்:இன்று நாம் அனைவரும் அறிந்த வார்த்தை 'செல்பி'. துாங்கி எழுவது முதல், இரவு துாங்கும் வரை, நாம் எடுக்கும் 'செல்பி' புகைப்படங்களை, 'பேஸ்புக்', 'ட்விட்டர்' போன்ற சமூக வலைதளங்களில்பகிர்வது, தினசரி பல் துலக்குவது போலாகி விட்டது. இதில், பல முகபாவங்களுடன் படம் எடுத்து கொள்வது ஆரம்பநிலையாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து உடல் அங்கம் தெரியும்படி எடுப்பது,உடலை துன்பப்படுத்தி கோரமாக எடுப்பது, உள்ளாடையோடு 'ஆபாச போஸ்' கொடுத்து எடுப்பது என, பட்டியல் நீள்கிறது.இதற்கு அடுத்த கட்டமாக, 'ரிவன்ஜ் பார்ன்' எனப்படும், ஆபாச பழிவாங்கல் படலமும் வளர துவங்கியுள்ளது. காதலர்கள் தங்கள் அந்தரங்க தருணத்தில் எடுத்த புகைப்படங்களை, பின்னர் பிரச்னை ஏற்படும்போது பரப்பி,பழிவாங்குவது தான் 'ரிவன்ஜ் பார்ன்'. இது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.'செல்பி' படங்களை பொழுதுபோக்குக்காக எடுத்தால் தவறில்லை. அந்த படங்களுக்கு, 'லைக்', 'கமென்ட்ஸ்' வர வேண்டும் என்ற நோக்கில் செய்தால், அந்த பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்; இல்லையென்றால் காலப்போக்கில் மனநோயாளியாக மாறுவது உறுதி என்கின்றனர், மனநல டாக்டர்கள்.கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் மணி கூறியதாவது:'செல்பி' எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதை சிலர், 'முழுநேர பணி'யாக செய்கின்றனர். இதுவும் புதுவகையான மனநோய்தான். தினமும் குறைந்தது மூன்று முறை, 'செல்பி' படம் எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் போடுவது ஆரம்ப மனநிலை. கணக்கின்றி நினைத்த போதெல்லாம் படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் தவறாமல் பதிவேற்றம் செய்வது இரண்டாம் நிலை. எப்போதும் எதை பார்த்தாலும், 'செல்பி' படம் எடுத்து உடனுக்குடன்,சமூக வலைதளங்களில் போடும் செயல் மூன்றாம் நிலை. இதுதான் 'செல்பி'மோகம் முற்றி, மனநோயாளியாக மாறும் நிலை.'செல்பி' மோகத்துக்கு அடிமையானவர்கள் உணர்ச்சிவசப்படுவர்களாக இருப்பார்கள். தன்னை காட்சி பொருள் போன்று பார்க்கும் நடவடிக்கைகள், அதிக பிரச்னைகளை உண்டாக்கும். 'செல்பி' மோகம் முற்றி, மனநோயாளியாக மாற்றும் நிலை உருவாகும். மற்றவர்கள் தன்னை பெருமையாக பேச வேண்டும் என, தம்பட்டம் அடிப்பவர்களின் வெளிப்பாடு தான் 'செல்பி'. இதற்கு உடல்தோற்ற விருப்ப ஆளுமை கோளாறு (Narcissistic Personality Disorder) என பெயர். இவ்வாறு, மணிகூறினார்.


'ரீ-ஸ்டார்ட்' சிகிச்சை:இணைய தள மோகத்தால் நேரிட்ட மனநோய் பாதிப்பிலிருந்து மீட்க, அமெரிக்கா போன்ற நாடுகளில் மறுவாழ்வு மையம் துவக்கப்பட்டுள்ளது.இவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு, 'ரீ--ஸ்டார்ட்' என்று பெயர். கம்ப்யூட்டரால் 'ஹேங்க்' ஆகி போனவர்களுக்கு அளிக்கப்படும், 'ரீ--ஸ்டார்ட்' சிகிச்சை, 45 நாட்கள் அளிக்கப்படுகிறது. இன்டர்நெட், வீடியோ, கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் இருந்து, 45 நாட்கள் பிரித்து வைத்து, யோகா, உடற்பயிற்சி, மசாஜ், நடைப்பயிற்சி, கலந்தாய்வு என, 'ரீசார்ஜ்' சிகிச்சை பல கட்டங்களாகஅளிக்கப்படுவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


போலீஸ் எச்சரிக்கை:'செல்பி' படங்களால் அந்தரங்கத்துக்கு ஆபத்து.கோவை மாநகர 'சைபர் கிரைம்' போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாலை கூறுகையில், ''எதற்கும் ஒரு அளவு உண்டு; மீறினால் ஆபத்து. தினமும், ஆபாச எஸ்.எம்.எஸ்., புகைப்படங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. பெண்களே அதிகமாக பாதிக்கின்றனர். 'செல்பி' எடுப்பதாக சொல்லி, அந்தரங்கங்களை வெளியிட்டு சிக்கி கொள்கின்றனர். அவரவர் பாதுகாப்பை அவர்கள்தான், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.


பெண்களே அதிகம்:குடும்பநலம் மற்றும் ணவர் நல ஆலோசகர் டாக்டர் கோதனவல்லி கூறுகையில், ''திருமணமான பெண்கள், 24 மணி நேரமும், மொபைல் போனும் கையுமாக இருப்பதால், குடும்பச் சிதைவு ஏற்படுகிறது. பெண்கள் அதிகளவில், 'வாட்ஸ்ஆப்', 'செல்பி', இணையதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த மனநோய்க்கும் தனியாக சிகிச்சை மையங்கள் துவக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி