பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு!


ஒரே தேர்தல், ஒரே ரேஷன் பாணியில், பல்கலைக் கழகம், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, புதிய தேசியக் கல்விக் கொள்கை இறுதி வரைவில் பரிந்துரைக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2வது முறையாக பதவி ஏற்றதில் இருந்து, நாடு முழுவதும் அனைத்தையும் ஒரே மாதிரியாக கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பதில் தொடங்கி ஒரே ரேஷன், ஒரே வரி, ஒரே மொழி என அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் கல்வித்துறையும் தப்பவில்லை. மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், கலை அறிவியல் உட்பட அனைத்துபட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும், பட்டப்படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவில் பரிந்துரைக்கப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, இத்தேர்வு ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும். இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் சேர மாணவர்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வருவதின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறையும்.புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு செய்யும் பணி முடிந்துள்ளது. இதனால், இறுதி வரைவு விரைவில் தயாராகி விடும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. உயர்கல்விக்கான பரிந்துரைகளை ஆய்வு செய்ய பெங்களூருவில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. பள்ளி கல்விக்காக, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலின் கீழ் ஒரு குழு அறிக்கையை இறுதி செய்தது.

புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்போக்கான, முற்றிலும் இந்தியாவை மையமாக கொண்ட கொள்கையாக இருக்கும் என நம்புகிறேன். இறுதி வரைவுக்கு பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்ததும், அதை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, பொறியியல், வேளாண், மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட சில பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருந்து வருகிறது. கலை, அறிவியல் பட்டப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில், கலை, அறிவியல் பட்டப்படிப்புக்கும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வரப்படும் என்பது கிராமப்புற மாணவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

* புதிய தேசிய கல்விக் கொள்கையில் பட்டப் படிப்புகளுக்கு பாடவாரியாக தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட உள்ளது. இத்தேர்வு ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும்.
* தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு என மாணவர்கள் தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டி உள்ளது.

4 comments:

  1. Neet exam கொண்டு வந்து எப்படி தமிழகத்தில் பல ஏழைகளின் மருத்துவ கனவு சிதைந்து போனதோ ,அது மாதிரி தான் இதுவும் .கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு ஆனால் அவர்களுக்கு கற்பிக்கும் உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனமாம் .இது எந்த வகையில் நியாயம் ?doctor ,engineer ல் சேர முடியாத ஏழை மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் . இம்முறையினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் .நீதி மன்றம் இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. எல்லாத்துக்கும் தேர்வு வைக்கிறார்கள் .நம்மை ஆளக்கூடிய அரசியல்வாதிகளுக்கும் தகுதித் தேர்வு நடத்தனும் , விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரனும் .ஒய்யால ஒரு பய அரசியலுக்கு வர முடியாது .

    ReplyDelete
  3. பரதேசிகளின் கூடாரம் ஆட்சி செய்தால் இப்படி தான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி