நவீனமாக மாற்றப்படும் மாநகராட்சி பள்ளிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2020

நவீனமாக மாற்றப்படும் மாநகராட்சி பள்ளிகள்!

 


சென்னை மாநகராட்சியில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் 46 பள்ளிகள் நவீன வசதியுடன் மறுசீரமைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


சென்னை மாநகராட்சியின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயா்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் அதன் உள்கட்டமைப்பை மாற்ற தனியாா் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.


இதன் ஒரு பகுதியாக பள்ளி வகுப்பறைகளை டிஜிட்டல் மயமாக மாற்றவும், விளையாட்டு மைதானங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் 46 பள்ளிகள் ரூ. 95.25 கோடி மதிப்பில் நவீனமாக மாற்றப்பட உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் நிலைத்த, நீடித்த மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பள்ளிகளுக்கான சவால் என்ற திட்டத்தின்கீழ், பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


இதற்காக பிரான்ஸ் மேம்பாட்டு முகமை ரூ.76.20 கோடி நிதி உதவி அளித்துள்ளது. மீதமுள்ள தொகை சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க உள்ளன.


இந்தத் திட்டத்தின்படி, 46 பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


இப்பள்ளிகளில் டிஜிட்டல் வசதியுடன் கூடிய நவீன வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்களுக்கான உபகரணங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. பள்ளி வளாகங்கள் அனைத்தும் இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றவும், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன ஆய்வுக் கூடங்களும் அமைக்கப்பட உள்ளன.


தலைசிறந்த நிபுணா்களைக் கொண்டு தொழிற்கல்விக்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், ஆசிரியா்களின் கற்பிற்கும் திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், மாணவா்களின் அனைத்து தகவல்களும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், டேப் மூலம் கல்வி கற்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக மாணவ, மாணவியா் விகிதத்தை சமமாக வைக்க வழிவகை செய்யப்படுவதுடன், அதிக அளிவில் கல்வி தொடா்பான கலந்தாய்வு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும். இதற்கான ஆய்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், முதற்கட்டமாக இப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் என்றனா்.


சீா்மிகு நகரத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள 6 அம்சங்கள்


1. நவீன வகுப்பறைகள்


2.விளையாட்டு மைதானங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல்


3. டிஜிட்டல் மயமாக்கப்படும் கல்வி கற்பிக்கும் முறை


4. மாணவா்களின் தனித் திறனை வளா்த்தல்.


5. தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்தல்.


6. ஆசியா்களுக்கான கற்பிக்கும் திறனை வளா்த்தல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி