மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு; சென்னை ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2022

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு; சென்னை ஐகோர்ட் உத்தரவு.

 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகள் ஆகியும் பின் தங்கியவர்கள் பின் தங்கியவர்களாகவே உள்ளனர் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், இந்த சட்டத்தின் பயன்களை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி, நீதிபதி பரணி சக்ரவர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில், இந்த வழக்கில் இன்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், பொதுப்பிரிவினருக்கான 31% இடஒதுக்கீட்டில் இந்த 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதனால், இடஒதுக்கீட்டில் பொதுப்பிரிவு மாணவர்களிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த 7.5% இடஒதுக்கீடு நீட் தேர்வு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற தன்மை போன்ற அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் நீதிபதி கலையரசன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்ள வசதி உள்ளது.

ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதுபோன்ற வாய்ப்புகள் இல்லை என்பதனால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்த இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றார். உயர்கல்வித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியது நியாயமானது தான்’ என்றார். அதேபோல், அரசு உதவிப்பெறக்கூடிய பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை கவனத்தில் கொள்ள தவறி விட்டதாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிலையில் மருத்துவப்படிப்பில் மட்டும் பாரபட்சம் காட்டுவது தவறு’ என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறதா என அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தியிருந்தால் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது’ என்றார். இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி