அரசு ஊழியர்களுக்கும் மாதந்தோறும்... வரி பிடித்தம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2024

அரசு ஊழியர்களுக்கும் மாதந்தோறும்... வரி பிடித்தம்!

 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயமாக மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் புது நடைமுறை, இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. விருப்பம் போல வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு கைவிடுகிறது.


தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், வருமான வரி செலுத்தக் கூடியவர்களுக்கு, அவர்கள் விருப்பம் போல், மாதந்தோறும் அல்லது கடைசி மூன்று மாதங்களில் வருமான வரி பிடிக்கப்பட்டு வந்தது.


அரசு முடிவு


தற்போது, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., எனப்படும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் வழியே வருமான வரியை கணக்கிட்டு, மாதந்தோறும் சம்பளத்தில் பிடிக்கும் முறையை அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது.


இந்த புது நடைமுறை, கடந்த ஏப்ரலில் நடைமுறைக்கு வரவிருந்தது. ஆனால், தலைமை செயலக சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, மார்ச்சில் பிடித்த வருமான வரியே கடந்த மாதம் பிடிக்கப்பட்டது.


தற்போது, மாதந்தோறும் வருமான வரி பிடிக்கும் புது நடைமுறை, மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, கருவூல கணக்குத்துறை சார்பில், அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதம்:


வருமான வரி செலுத்த தகுதி படைத்த ஊழியர்கள் அனைவருக்கும், அவர்கள் பெறும் சம்பளத்தின்படி, செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கிடப்படும்.


'பான் கார்டு'


அந்தத் தொகைக்கு எவ்வளவு பிடிக்கலாம் என கணக்கிட்டு, மாதந்தோறும் கட்டாயம் பிடிக்கப்படும். இந்த நடைமுறை இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது.


'பான் கார்டு' எனப்படும் நிரந்தர கணக்கு எண் இல்லாத ஊழியர்கள், அதை பெற்று, அந்த எண்ணை தெரியப்படுத்த வேண்டும்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை, வருமான வரித்துறை அறிவித்துள்ள, 'Old Regime' எனப்படும் பழைய முறையில் கணக்கிட்டு பிடிக்க வேண்டுமா அல்லது 'New Regime' எனப்படும் புது நடைமுறைப்படி பிடிக்க வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.


கோரிக்கை


எந்த முறையில் வருமான வரி பிடிக்க வேண்டும் என்பதை, ஒரு முறை தேர்வு செய்த பின், எதிர்காலத்தில் மாற்ற முடியாது.


எனவே, கவனமாக தேர்வு செய்யவும். வருமான வரித்துறையின் பழைய கணக்கீட்டு நடைமுறையின்படி வருமான வரி செலுத்துவோர், தங்கள் சேமிப்பு விபரங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தலைமை செயலக சங்கம், நடப்பு நிதியாண்டிலிருந்து, புதிய மென்பொருள் வழியே வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

2 comments:

  1. வருமான வரி பிடிப்பதை யாரும் எதிர்க்கவில்லை.
    எந்தக் கணக்கீடு படி வரி பிடித்தம் செய்கிறீர்கள் என்று சம்பந்தப் பட்டவருக்கு சொல்வதில் ஏன் தயக்கம்?
    அதிக வரி பிடித்து கட்டி விட்டால் திருப்பி வாங்கித்த தரும் பொறுப்பில்லை என்று கருவூலம் நழுவும் போது எந்தக கண்கீட்டின் படி வரி பிடிக்கப் பட்டது என்ற வெளிப் படைத் தன்மை ஏன் இல்லை.
    IFHRMS , கம்ப்யூட்டர் என்றெல்லாம் பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீங்க.
    கம்யூட்டர் தப்பு செய்யாது.
    சாப்ட்வேர் எழுதுபவர் சரியாக செய்தாரா என்று கண்காணிப்பது? கண்க்கீட்டை வெளியிடுங்கள்.
    தவறுகள் சகஜம் சரி செய்து கொள்ளலாம்
    R.அன்பழகன், கரூர்

    ReplyDelete
  2. சங்கங்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த வேண்டும் 😄😄😄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி