இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஹால் டிக்கெட்டில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்கு ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை உள்ளே கொண்டு செல்லலாம். வழக்கம்போல, செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணிய கூடாது. தலை முடியில் ஜடை பின்னல் போடக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றையும், இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும்.
ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.
தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி