School Morning Prayer Activities - 19.01.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2026

School Morning Prayer Activities - 19.01.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

திருக்குறள் 

குறள் 241: 
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணு முள.                   

விளக்க உரை: 

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்

பழமொழி :

Good things take time.        

நல்லவை நடக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’

- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

பொது அறிவு : 

01.இந்திய தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?

  சேவைத் துறை -Tertiary Sector

2. உலக அளவில் தொழிற்புரட்சி முதல் முதலில் நடைபெற்ற நாடு எது?

     இங்கிலாந்து- England 

English words :

swoop-dive

 bifurcated-split

தமிழ் இலக்கணம்:


போடு, செய் , எடு – இவை நம் வினை மரபுச் சொற்களை எவ்வாறு மங்கி அழிந்து போகச் செய்கிறது என்பதைக் குறித்து இன்று காண்போம்.
*போடு*
1.பசு கன்று போட்டது –தவறு
பசு கன்று ஈன்றது 
2.வீட்டின் மேல் கூரை போட்டனர் – தவறு 
வீட்டின் மேல் கூரை வேய்ந்தனர் 
3.நீதி மன்றத்தில் வழக்கு போட்டார் –தவறு 
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
4.புதிதாக சாலை போட்டனர் – தவறு 
புதிதாக சாலை அமைத்தனர்
இன்று சில சரியான வினை முற்றுச் சொற்களை பார்த்தோம். நாளையும் தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.

ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.

நீதிக்கதை

 கரடியும் இரண்டு நண்பர்களும்


ஒரு ஊரில் இரண்டு இணை பிரியாத நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராகவன் மற்றொருவன் சுந்தரன். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராகவன், சுந்தரனிடம் நீ எதைப்பற்றியும் பயபடாமல் என்னுடன் வா. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறினான். 

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கரடி ஒன்றின் உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதுமே இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. சில வினாடிகள் ஓடிய பிறகு ராகவன் ஒரு மரம் இருப்பதை கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராகவன் ஏறி அமர்ந்து கொண்டான். 

சுந்தரனுக்கோ மரம் ஏறத் தெரியாது என்று ராகவன் நன்கு அறிந்திருந்தும் அவனைக் கீழே விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற சுய நலத்தோடு ராகவன் நடந்து கொண்டான். சுந்தரனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் இறந்தவனைப்போல் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான். 

அப்போது அங்கு வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. சுந்தரன் இறந்துவிட்டான் என்று நினைத்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. சுந்தரனின் காதருகே சென்று கரடி முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராகவன் கரடி சுந்தரனிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. 

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராகவன், கீழே இறங்கி வந்து சுந்தரனை எழுப்பினான். சுந்தரா எழுந்திரி நாம் தப்பி விட்டோம். அந்த கரடி சென்று விட்டது என்று கூறிச் சுந்தரனை எழுப்பினான். சுந்தரனும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். 

ராகவன், சுந்தரனிடம், கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது? என்று கேட்டான். அதற்குப் சுந்தரன், ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது என்றான். சுந்தரனின் பதிலைக் கேட்டு, ராகவன் தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சுந்தரனோ இனி மேல் நம் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறி விட்டுத் தனியே நடந்து சென்றான். 

நீதி :

ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்.

இன்றைய செய்திகள்

19.01.2026

⭐வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை செய்யும் Vehicle-to-Vehicle (V2V) எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அனைத்து வாகனத்திலும் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐2024-ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

⭐தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் வகையில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 9 புதிய அம்ரித் பாரத் ரயில்களின் சேவை  தொடங்கின.

⭐242 சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்களின் இணைப்புகளை இந்திய அரசு முடக்கியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய ஓபன் பேட்மிண்டன்:  
தென் கொரிய வீராங்கனை
அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
முதல் சுற்றில் சுவரேவ், ஜாஸ்மின் பாலினி வெற்றி. உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்.

Today's Headlines

⭐The central government is planning to make it mandatory to install Vehicle-to-Vehicle (V2V) communication technology in all vehicles, which will immediately alert you when vehicles come too close.

⭐Tamilnadu has ranked 2nd in the NITI Aayog's export ranking list for the year 2024.

⭐9 new Amrit Bharat trains, including three new Amrit Bharat trains connecting Tamilnadu and West Bengal, have started service.

⭐The Indian government has blocked links to 242 illegal betting and gambling websites.

 *SPORTS NEWS* 

🏀Indian Open Badminton: South Korean player Ahn Se-young has already won the championship title in 2023 and 2025. Now she has won the championship title for the 3rd time.

🏀 In Australian Open Tennis  series, Suvarev and  Jasmine Paolini won in first round   Alexander Suvarev is ranked 3rd in the world.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி